அமைச்சர் அஸ்வினிக்கு இயக்குனர் அஸ்வின் சொன்ன ஆலோசனை

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் வழிபடும் முக்கிய வைணவத் தலங்களுள் முதன்மையான கோயில் ஆந்திர மாநிலம் திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில். திருமலைக்குச் செல்ல திருப்பதி ரயில் நிலையம் ஒரு முக்கியமான இடம். இந்தியா முழுவதிலும் இருந்து திருப்பதிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

திருப்பதி ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மிக வேகமாக மாற்றப் போவதாகவும், அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இரு தினங்களுக்கு முன்பு புதிய ரயில் நிலையத்தின் மாடல்களுடன் பதிவிட்டிருந்தார்.

அதற்கு 'மகாநடி' படத்தை இயக்கியவரும், தற்போது பிரபாஸ் நடிக்கும் 'பிராஜக்ட் கே' படத்தை இயக்கி வரும் நாக் அஸ்வின் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்து ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். அதில், “டியர், சார்…கமெண்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். யாரும் அதை விரும்பவில்லை. அந்த டிசைன் ஒரு வெஸ்டர்ன் காப்பி ஆகவும், மோசமான ஒரு ஐ.டி பார்க் போலவும் உள்ளது. திருப்பதி புனிதமான, ஆன்மீகத் தலம். இந்தியாவின் கட்டிட வடிவமைப்பைப் புரிந்து கொண்ட மக்கள் இதை டிசைன் செய்யட்டும். ஆனால், இந்த கிளாஸ் மற்றும் ஸ்டீலால் ஆன காப்பி வேண்டாம்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.