ரீடிங் மாரத்தான்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் தொடங்கிய புதிய திட்டம்

க.சண்முகவடிவேல்

திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தொடர் நிகழ்வாக மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை, கூகுல் நிறுவனத்தின் வழியே “ரீடிங் மாரத்தான்” என்கிற புதிய திட்டத்தை இன்று ஜூன் 01 முதல் 12-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டது.

இத்திட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் தங்கள் கைப்பேசியில் “கூகுல் ரீடிங் அலாங்” என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் வழியே எளிய முறையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான துவக்க விழா நிகழ்ச்சி திருவெறும்பூர் பகவதிபுரம் நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது.

விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு வாசிப்புத்திறன் தொடர் ஓட்டம் திட்டத்தை தொடங்கி வைத்தார். விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, பள்ளித் தலைமை ஆசிரியர் அலமேலுமங்கை, மாநகராட்சி கவுன்சிலர்கள் நீலமேகம், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் மாணவ மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்; குழந்தைகளுக்கு வாசிக்கின்ற திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கூகுள் நிறுவனத்துடன் ஒரு மாதத்திற்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டது.

அதன் முக்கிய அம்சம் குழந்தைகளுக்கு வாசிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக அந்த திட்டத்தை இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை தொடர்ந்து நடத்த இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று திருச்சி ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி மையம் தமிழகத்தில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் மையங்கள் உள்ளதாகவும், அதிலிருக்கும் தன்னார்வலர்களும் மொபைல் போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு படிக்கச் செய்வோம்.

குழந்தைகளை படிக்கும்போது நூறு வார்த்தைகள் கொண்ட சிறிய கதை முதல் 400 வார்த்தைகள் கொண்ட பெரிய கதை வரை படிக்கச் செய்வோம். நான்கு கட்டமாக இதற்கு உரிய பயிற்சிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். அப்படிப் படிக்கும்போது செயற்கையான நுண்ணறிவு எற்படும் முழுமையாக படிக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக படிக்க வேண்டும் என்பதற்காக கூகுள் வாசிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த செயலியின் பெயர் “கூகுள் அலாமிங் ரீடு” என்பதாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் தொண்டர்கள் மூலம் செய்ய வேண்டும் என்பதே எங்களது ஆசை அதில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். வரும் 13-ம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் வாசிப்புத் திறனுக்காக கதைகளோடு புகைப்படங்களும் இருப்பதால் படிப்பதற்கு அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்று முதல் 12-ம் தேதி வரை இந்த வாசிப்பு திறன் பயிற்சி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.