அரசியலில் குதிக்கிறாரா சவுரவ் கங்குலி – ராஜ்யசபா எம்பி ஆகிறார்?

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அரசியலில் குதிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கிறார். இந்த வாரியத்தின் செயலாளராக, பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவின் மகன், ஜெய் ஷா உள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கொல்கத்தாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இரவு விருந்து வைத்தார். இந்த விருந்தில், பாஜக மூத்தத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இரவு விருந்து வைத்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் புயலைக் கிளப்பியது. அப்போதே அவர் பாஜகவில் இணைய உள்ளதாக ஒரு செய்தி உலா வந்தது.

இது ஒருபுறம் இருக்க, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர். இருவருக்கும் இடையே அப்படி ஒரு நட்புறவு உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, சவுரவ் கங்குலி டின்னர் விருந்து கொடுத்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள பதிவில், “கிரிக்கெட் உலகிற்கு நான் வந்து இதோடு 30 வருடம் ஆகிறது. 30 வருடங்களில் எனக்கு ஆதரவு அளிக்க மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் இன்று ஒரு விஷயத்தை துவங்க போகிறேன். நான் துவங்கும் விஷயம் பலருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நான் வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் புதிய அத்தியாயத்திற்கு உங்களின் ஆதரவு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், சவுரவ் கங்குலி அரசியலுக்குள் நுழைகிறாரா அல்லது பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இவரை, நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கிடையே, பிசிசிஐ தலைவர் பதவியை கங்குலி ராஜினாமா செய்து விட்டதாக செய்தி வெளியாகியது. இது குறித்து விளக்கம் அளித்த, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “பிசிசிஐ தலைவர் பதவியை சவுரவ் கங்குலி ராஜினாமா செய்யவில்லை” என, தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.