ரெயிலுக்கு இரையான ஒரு தலைக் காதலன் மாணவியை தாக்கி விபரீதம்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாணவியை காதலித்து வீட்டில் இருந்து அழைத்துச் சென்றதால் போக்சோ வழக்கில் குடும்பத்துடன் கைதான இளைஞர், சம்பந்தப்பட்ட மாணவியை கத்தியால் குத்திவிட்டு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் 16 வயதான மாணவி ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று
இறுதித் தேர்வை எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

திருச்சி ரோடு ரயில்வே கேட் அருகே உள்ள மேம்பாலத்திற்கு கீழே சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலை ஏற்று தன்னுடன் வரும்படி கூறவே அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து உள்ளிட்ட 10 இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

மணப்பாறை காவல்துறையினரின் விசாரணையில் தப்பிச்சென்றவர் பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த கேசவன் என்ற 22 வயது கட்டிட தொழிலாளி என்பது தெரியவந்தது .
காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில்
செவ்வாய்கிழமை இரவு, கீழ பூசாரிப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாக தகவல் கிடைத்தது.

திருச்சி ரயில்வே போலீசார் மற்றும் மணப்பாறை போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று பார்த்த போது அது மாணவியை குத்திவிட்டு தப்பி ஓடிய கேசவன் என்பதை உறுதி செய்தனர்.

ஏற்கனவே இந்த மாணவியை காதல் வலையில் வீழ்த்தி வீட்டை விட்டுஅழைத்து சென்றதால் கேசவன், அவனது தாய் தந்தை ஆகிய 3 பேரையும் கைது செய்து போக்சோ மற்றும் சாதிய வன்கொடுமை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுமார் 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளிவந்த கேசவன், அந்த மாணவியை சந்தித்து தன்னுடன் வருமாறு அழைத்த போது மறுத்ததால் ஆவேசமாகி அந்த மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாகவும், தான் உயிராக நினைத்த மாணவியே தன்னை வெறுத்து விட்டதால் விரக்தி அடைந்து தண்டவாளத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று, விரைவு ரெயில் ஒன்றில் விழுந்து உடல் சிதறி பலியானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இது குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்மூடித்தனமாக காதலில் விழுந்தவர்களை மட்டுமே அது அழிக்கின்றது என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சோக சாட்சி..!

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.