பாடகர் கே.கே மரணம் – சந்தேக மரணமாக பதிவுசெய்து காவல்துறை விசாரணை

பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் எதிர்பாராதவிதத்தில் மரணமடைந்த நிலையில், அவரது இறப்பை சந்தேக மரணமாக பதிவுசெய்து காவல்துறை விசாரித்துவருகிறது.

53 வயதாகும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் 2 கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக வந்த நிலையில் எதிர்பாராத வகையில் மரணமடைந்தார். அவரது மரணத்தை சந்தேக மரணமாக பதிவுசெய்து காவல்துறை விசாரித்து வருகிறது. கிருஷ்ணகுமார் தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளர் மற்றும் பிற பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்வரை என்னென்ன நடந்தது என்பதை அறிய சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விசாரணையில், கேகே பங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருந்ததாக தெரிகிறது. நிகழ்ச்சி அரங்கில், கிருஷ்ணகுமார் அசௌகரியமாக இருந்ததாகவும், அடிக்கடி வியர்வையை துண்டால் துடைத்துக்கொண்ட காட்சிகளும் கிடைத்துள்ளன. அந்த இடம் மிகவும் வெப்பமாக இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கேகே கூறியிருக்கிறார்.

image

நிகழ்ச்சி முடிந்து ஹோட்டல் அறைக்கு திரும்பியபோதும், ஹோட்டலுக்குள் பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்துள்ளது. பலரும் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டியபோது ஒருசிலரை அனுமதித்த கேகே, பின்னர் அங்கிருந்து விலகி படியேறிச் சென்றுள்ளார். அங்குதான் அவர் மயங்கி தரையில் விழுந்துள்ளார். உடனே ஹோட்டல் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது நெற்றியின் இடதுபுறத்திலும், உதட்டிலும் காயங்கள் இருக்கும் நிலையில், அவர் கீழே விழுந்தபோது ஏற்பட்ட காயமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கேகே இறப்புக்கு மாரடைப்புதான் காரணம் என தெரிவித்த நிலையில், உடற்கூராய்வுக்குப் பின்னரே அவரது இறப்பில் உள்ள சந்தேக இருள் அகலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.