திருகோணமலை துறைமுகத்தை கைத்தொழில் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளதாக இலங்கையின் துறைமுக அதிகாரசபையின் தலைவர் பிரசாந்த ஜெயமான தெரிவித்துள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தில் சுமார் 2400 ஹெக்டேர் உள்ளதாகவும், அதனை தொழில்துறை துறைமுகமாக உருவாக்க சாத்தியமான முதலீட்டாளர்கள் உள்ளார்கள் எனவும், முக்கியமாக உள்ளூர் முதலீட்டாளர்கள் மீது அதிக கவனம் செலுத்துகின்றோம் எனவும் அதிகாரசபையின் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அதே நேரத்தில் திரு.ஜெயமான, தனியார் முனையங்களின் தலைவர்கள் மற்றும் இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் முக்கிய பங்குதாரர்கள் அனைவரும் அந்நிய செலவாணி பிரச்சினை இருந்தபோதிலும் கொழும்பு துறைமுகம் சுமுகமாக இயங்குவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார பிரச்சினையின் மத்தியில் வாடிக்கையாளர்கள் அனைவரும் டொலரில் பணம் செலுத்துமாறு அறிவித்திருந்த போதிலும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் மட்டும் டொலருக்கு பதிலாக ரூபாயில் பணம் செலுத்த அனுமதியளிக்க முடிவு செய்துள்ளோம் எனவும் கூறினார்.
இலங்கை கப்பல் முகவர்கள் சங்கத்தின் தலைவர் ஷெஹாரா டி சில்வா கூறுகையில், துறைமுக செயற்பாடுகள் தொடர்பில் சங்கத்தின் அங்கத்துவ நிறுவனங்களுக்கு இன்றுவரை எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை எனவும் கொழும்பு துறைமுக சேவைகளில் எவ்வித பிரச்சனை இன்றி மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
துறைமுக சேவைகளில் சிறிய பின்னடைவுகள் இருந்தாலும் துறைமுக செயற்பாடுகள் சுமூகமான முறையில் நடைபெறுகிறது என தெற்காசிய கேட் டெர்மினல் தலைமை செயல் அதிகாரி ரொமேஷ் டேவிட் தெரிவித்திருந்தார். இந்த வருடம் கொழும்புத் துறைமுக செயற்பாடுகள் மேலும் வளர்ச்சி அடையும் எனவும் உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.