தேனி: மகனைக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய தந்தை – போலீஸில் சிக்கியது எப்படி?

தேனி மாவட்டம், சின்னமனூர் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் மூவேந்திரன் தனியார் நிறுவன பொருள்களை தவணை முறையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இளைய மகன் அரவிந்தன் உறவுக்காரப் பெண்ணை காதலிப்பதாக கூறியதைத் தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அய்யாச்சாமி

இந்நிலையில், இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்து அனைவரும் கிளம்பும்போது, மூத்த மகன் மூவேந்தரன் தன் தம்பி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தந்தை அய்யாசாமியுடன் வாக்குவாதம் முற்றியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது.

ஒருவழியாகத் தகராறு முடிந்தநிலையில், அனைவரும் திருமணத்திற்குச் சென்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்திருக்கின்றனர். அப்போது, மூவேந்தன் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையிலிருந்திருக்கிறார். குடும்பத்தினரோ மூத்தவன் இருக்கும்போது இளையவனுக்குத் திருமணம் நடந்த விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகச் சுற்றத்தாரிடம் கூறினர். இதையடுத்து உறவினர்கள் வீட்டில் திருமணத்திற்கான அலங்காரங்களை அகற்றிவிட்டு, மூவேந்தரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

மூவேந்திரன்

திருமண விழாவிற்கு வந்த அனைவரும் துக்கத்தை விசாரிக்கும்போது, தலையில் பலத்த காயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்து சின்னமனூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். மூவேந்தரின் தலையிலிருந்து ரத்தம் கசிவதாகவும், அவருடைய தந்தை கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடுகிறார் என்றும் ரகசியத் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற சின்னமனூர் காவல்நிலைய போலீஸார் பிரேதத்தைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும், சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவர் தந்தை அய்யாசாமியைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்ஸ்பெக்டர் சேகர்

இது குறித்து சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேகரிடம் பேசினோம். “தனக்குத் திருமணத்தை முடித்துவிட்டு தம்பிக்குத் திருமணம் நடத்தக்கோரி மூவேந்திரன் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு முற்றியதில், தந்தை மகனின் தலையில் கம்பியால் தாக்கிவிடுகிறார். இதை மறைத்துவிட்டு தூக்கிட்டதுபோல செட் செய்துவிட்டு, திருமணத்தை முடித்துவந்து தற்கொலை என நாடகமாடியுள்ளார். ஆனால் காலை முதலே நடந்த தகராறு… மூவேந்திரன் தலையில் வடிந்த ரத்தம் ஆகியவற்றைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் அவருடைய தந்தையைப் பிடித்துவிசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.