லோகேஷிற்கு கமல் கைப்பட எழுதிய பாராட்டு கடிதம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்பட பலரது நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த 3ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படம் இதுவரை 125 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டி கமலஹாசன் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், ‛‛அன்பு லோகேஷ், பெயருக்கு முன்பு திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டு விட்டேன். இது நமக்கு தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும். பொதுவெளியில் எனது ரசிகர்கள் மற்றவர்களைவிட வித்தியாசமானவராக இருப்பது அவசியம் என்ற என் ஆசை பேராசை என்றனர், எனது விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணி திறமையாளர் ஆகவும் இருப்பது தான் ஆசைப்பட்டதை விட அதிகம்.

உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம். யூடியூப் ஐ திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதிலுள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்துக் கொள்ளலாம். இவைகளெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான் கமல்ஹாசன் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கடிதத்தை பார்த்து நெகிழ்ந்துப்போன லோகேஷ் கனகராஜ் அதை பகிர்ந்து தனது லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர் என்று பதிவிட்டுள்ளார். அதோடு இதை படித்த நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நன்றி ஆண்டவரே. என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.