நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம், வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வருகிற 11 ஆம் தேதி தம்பதியாய் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைவரது ஆசிர்வாதமும் தேவை என குறிப்பிட்டுள்ளார். என் வாழ்க்கையின் காதல் நயன்தாரா என தெரிவித்த விக்னேஷ் சிவன், 9 ஆம் தேதி திருமணத்திற்கு பின் புகைப்படங்களை பகிர்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் உறவினர், நண்பர்கள் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளதாக கூறிய அவர், நிறைய பேரை அழைத்து திருமணத்தை நடத்துவது உள்ளிட்ட சில காரணங்களால் திருப்பதியில் நடத்த முடியவில்லை என தெரிவித்தார்.
மேலும், வருகிற 11-ஆம் தேதி இருவரும் இணைந்து அனைவரையும் சந்திக்கிறோம் என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். திருமணத்தை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மணமக்கள் இருவரும் அழைப்பிதழ் வைத்து அழைப்பு விடுத்திருந்தனர். விக்னேஷ் சிவன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்குப் பிறகு அடுத்ததாக, நடிகர் அஜித்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
இதேபோல், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘O2’ படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. த்ரில்லருடன் மிரட்டலாக உருவாகியுள்ள இந்தப் படம், வருகிற 17-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது. மேலும், பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.