அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி நிறுத்தம்: தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

Demand to commence LKG and UKG classes this year in Govt schools: அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளை மீண்டும் துவங்க வேண்டும் என அரசுப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு துவக்கப் பள்ளிகள் பலவற்றில் மழலையர் வகுப்புகள் துவக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் படிப்பதற்கு மழலையர் தொடக்கப் பள்ளிகள் பெரிதும் உதவிகரமாக இருந்தன.

ஆனால் தற்போது அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் செயல்படுவதை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் சேர்க்கை எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்கின்றனர் தமிழக அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு கூட்டியக்கத்தினர். 

எனவே, அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி, தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாரபட்ச நிலையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தியுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்காது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கைகள் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவும் அரசுப் பள்ளிகளுக்கு பாதகமாகவும் உள்ளது. பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை புறக்கணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. இந்த நிலைமைகளை போக்கிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். இந்தக் கல்வி ஆண்டிலேயே அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் வகுப்புகள் துவக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கி முடிவடைந்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவக்கப்பட வேண்டும், தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே, தனியார் பள்ளிகளும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் செயல்படுகின்ற தனியார் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சாவூர் பனகல் கட்டடத்தில் செயல்படுகின்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப்பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அ.வெங்கடேசன், இரா.பிரசன்னா, கோ.சக்திவேல் ஆகியோர் தலைமை வைத்தனர். 

இதையும் படியுங்கள்: புதுக்கோட்டையில் ஸ்டாலின் விழா நடைபெறுமா? பலத்த மழையால் மைதானம் நாசம்

கருக்காடிப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான முத்து உத்திராபதி கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அரசு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் என்.குருசாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில நிர்வாகி ஜி.அரவிந்தசாமி, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, துணை தலைவர் ஆர்.பி.முத்துக்குமரன் மற்றும் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் த.கிருஷ்ணன், வேணுகோபால், ராஜமாணிக்கம், பழனியப்பன், கார்த்தி, பெர்னாட்சா, ராமகிருஷ்ணன், சிவாஜி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 

முடிவில் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் மாவட்ட நிர்வாகி இரா.அருணாசலம் நன்றி கூறினார்.

எஸ். இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.