இருமல், சளி, வலி, தோல் பிரச்சினைகள் போன்றவற்றுக்கான மருந்துகளை விற்பதில் தளர்வுகளைக் கொண்டுவர ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி 1945இல் கொண்டுவரப்பட்ட மருந்துச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஒன்றிய சுகாதாரத் துறை பருந்துரைத்துள்ளது. இதற்காக 16 மருந்துகள் அடங்கிய K பட்டியல் ஒன்றைப் பரிந்துரைத்திருக்கிறார்கள்.
பரிந்துரைக்கப்படும் மருந்துகளை நேரடியாக மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். அதற்கு மருத்துவரின் மருந்துச் சீட்டு அவசியம் இல்லை. கிருமி நாசினியான போவிடோன் அயோடின், பல் ஈறு அழற்சிக்கான குளோரெக்சிடின், க்ளோட்ரிமாசோல், பாராசெட்டமால் உள்ளிட்ட 16 மருந்துகள் இதில் அடக்கம்.
இந்தப் பரிந்துரை ஏற்றுச் சட்ட திருத்தம் கொண்டுவரும் பட்சத்தில் மருந்துக் கடைகள், இந்தப் பருந்துகளையும் நேரடியாக சீட்டுகள் இல்லாமல் விற்கலாம். இதனால் உடனடியாகப் பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும். அதே நேரம் இந்த மருந்துகளை வாங்கி உட்கொண்டு ஐந்து நாட்களுக்கு மேல் குணமாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.