யார் இந்த நூபுர் சர்மா?

கடந்த மூன்று நாட்களாக இந்தியாவுக்கு உலக நாடுகளின் கண்டனங்களை பெற்றுத் தந்திருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் கூட இந்தியாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர். அல் கொய்தா தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தனைக்கும் காரணம் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சு. நபிகள் நாயகத்தை அவர் அவதூறாகப் பேசியதன் விளைவாகவே இத்தனை களேபரங்கள் தொடர்கின்றன.

யார் இந்த நூபுர் சர்மா? டெல்லி பாஜகவில் நூபுர் சர்மா மிக முக்கியமான அடையாளமாக இருந்தார். இன்று அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அவர் மீது போலீஸ் எஃப்ஐஆரும் பதிவு செய்துள்ளது. அரசியலுக்கு வந்ததில் இருந்தே நூபுர் சர்மா சர்ச்சைகளுக்குப் பெயர் போனவராகவே இருந்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தான் அவர் பயின்றார். அப்போது அவர் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவராக இருந்துள்ளார். ஏபிவிபி சார்பில் போட்டியிட்டு 2008ல் அவர் பல்கலை மாணவர் சங்கத் தலைவரானார். பின்னர் வழக்கறிஞரான நூபுர் சர்மா, மேற்படிப்பை லண்டனிலும் படித்துள்ளார்.

போராட்டத்தால் பெற்ற கவனம்: 2008 நவம்பர் 6 ஆம் தேதியன்று, டெல்லி பல்கலைக்கழகத்தில் மதவாதம், பாசிசம் மற்றும் ஜனநாயகம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவிருந்தது. அதற்கு எஸ்ஏஆர் கிலானி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். நாடாளுமன்ற வளாக தாக்குதலில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இந்நிலையில், நூபுர் சர்மா ஏபிவிபி ஆதரவாளர்களுடன் அரங்கத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டார். ஏபிவிபியைச் சேர்ந்த ஒருவர் கிலானியின் முகத்தில் உமிழ்ந்தார். நூபுர் கிலானியுடன் கைகலப்பில் ஈடுபட்டார்.

அடுத்தடுத்து வந்த பதவிகள்: இந்த சம்பவத்திறகுப் பின்னர் அவர் பாஜகவில் கவனம் பெற்றார். இதனால் அவர் பாஜக யுவ மோர்சாவில் தேசிய செயற்குழுவில் உறுப்பினரானார். பாரதிய ஜனதா யுவ மோர்சாவின் தேசிய ஊடக பிரிவு உப பொறுப்பாளராகவும் உயர்ந்தார். டெல்லி பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியும் வந்து சேர்ந்தது.

2015 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டார். ஆனால் 31000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்படும் வரை மிக முக்கிய புள்ளியாக வலம் வந்தார்.

இந்நிலையில் தான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக பேசுகையில் நபிகள் நாயகத்தை தரக்குறைவாக விமர்சித்து கட்சி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.