யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன்; பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு

Poonamalle court grants bail to Youtuber Karthik Gopinath: அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவிலை புனரமைக்கப்போவதாக கூறி நிதி வசூலில் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயிலை புனரமைக்கப் போவதாக கூறி, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் இணைய தளம் மூலம் பல லட்சம் நிதி வசூலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து, பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் செயல் அலுவலர் அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆவடி அடுத்த மிட்னமல்லி பகுதியைச் சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(டி) தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில், கடந்த வாரம் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்த நிலையில், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: கிராமத்தை நோக்கி… மொத்த அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் பயணித்த ஆட்சியர் ரமண சரஸ்வதி!

அதேநேரம், மத்திய குற்றப்பிரிவு போலீஸார், கார்த்திக் கோபிநாத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு அளித்திருந்த நிலையில், அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தநிலையில், கார்த்திக் கோபிநாத்தின் வழக்கறிஞர்கள் அவருக்கு ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தப்போது, கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.