அடுத்தவர் நிலத்தை ஆட்டையை போட்ட சார்பதிவாளருக்கு ஷாக்..! அபகரித்த நிலத்துக்கு ஈடாக அரசு அலுவலகம்.!

அடுத்தவருக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை எந்த ஒரு ஆவணமும் இன்றி வேறு நபர் பெயரில் பத்திரபதிவு செய்து கொடுத்த சார்பதிவாளருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அரசு அலுவலகங்களை தனது பெயருக்கு எழுதி தரக்கேட்டு நிலத்துக்கு சொந்தக்காரர் பேணர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கிழவனேரி கிராமத்தை சேர்ந்தவர் சமீர் ராஜா…. இவருக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் இடத்தை ஆவணங்களை சரிபார்க்காமல், ராதாபுரம் சார்பதிவு அலுவலர் சரவண மாரியப்பன் போலியாக வேறுநபருக்கு பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகின்றது.

இதனிடையே, புதன்கிழமை சார்பதிவாளரை கண்டித்து சமீர் அவரது நண்பர் பிரசாத் ஆகியோர் அலுவலகம் முன்பாக பதாகை ஒன்றை வைத்தனர்.

அதில், இராதாபுரம் சார் பதிவாளர் சரவணமாரியப்பன் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு நிலங்கள் இருந்தாலும் அதனை நிலத்தின் உரிமையாளர், வெளியூரிலோ, வெளிநாட்டிலோ, மிக அருகிலோ இருந்தாலும், அவர்களுக்கு சிரமம் கொடுக்காமல், எந்த வித அசல் ஆவணங்கள் இல்லாமலும்,சொத்தின் உரிமையாளர் கையொப்பம் இன்றியும், சொத்து மதிப்பில் 10 சதவிதம் கமிஷன் கொடுக்கும் நபருக்கு உடனே கிரைய ஆவணமோ, செட்டில் மெண்ட் ஆவணமோ பதிவு செய்து கொடுத்து பொதுமக்களின் நன்மதிப்பை பெற்று சேவை செம்மலாக சிறந்து விளங்கி வரும் சார்பதிவாளரை வாழ்த்தி வணங்குகிறோம். என்று வஞ்ச புகழ்ச்சி அணியால் அர்ச்சனை செய்துள்ளனர்.

இவரது பணியை செவ்வனே செய்ய உறுதுணையாக இருந்து வரும் இராதாபுரம் வருவாய் துணை வட்டாட்சியர் அவர்களையும் வாழ்த்தி வணங்குகிறாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், தங்களுடைய சொத்தான 2 1/4 ஏக்கர் சொத்தை தான் இல்லாமலும் தனது அசல் ஆவணங்கள் இல்லாமலும் ராஜகன்னிமரியாள் செட்டில்மெண்ட் மூலம் சாம் ராஜபிரபு என்ற நபருக்கு ஆவணம் பதிவு செய்ததற்கு ஈடாக தங்களை வாழ வைக்க இராதாபுரம் தாலுகா அலுவலகம், காவல்நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், உள்ளிட்ட இடங்களை தனது பெயருக்கு உரிமை மாற்றம் செய்து தருவதற்கு ஒப்புக் கொண்டு வாழும் கர்ணணே சரவணமாரியப்பனே உம்மே வாழ்த்த வயதில்லை, எங்கள் தலைமுறையே தங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்று வாழ்த்துவது போல அவர் செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதனையடுத்து ராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் வள்ளிநாயகம் சம்பவ இடத்திற்கு வந்து சமீர் ராஜாவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன் பெயரில் பதாகையை அங்கிருந்து திரும்ப எடுத்துச்சென்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.