சமந்தாவின் கஷ்டங்களை நேரிலேயே பார்த்தேன் ; உன்னி முகுந்தன்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள படம் யசோதா. வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாக உள்ள இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிப்படமாக உருவாகி உள்ளது. ஹரி மற்றும் ஹரிஷ் சங்கர் என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கி உள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்த ஜனதா கேரேஜ் என்கிற படத்தில் உன்னி முகுந்தனும் நடித்திருந்தார். ஆனாலும் அந்த படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் இல்லை என்றே சொல்லலாம் இந்த நிலையில் யசோதா படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் அவர் கூறும்போது சமந்தாவின் அர்ப்பணிப்பு உணர்வை கண்டு தான் பிரமித்துப் போனதாக கூறியுள்ளார்.

“சமந்தாவுடன் இந்த படத்தில் நடித்ததை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த படத்திற்காக அவர் மிகச்சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் அதிகப்படியான ஆக்சன் காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருந்தது. அவை ஒன்றும் அப்படி சாதாரண சண்டைக்காட்சிகளும் அல்ல. குறிப்பாக அதில் நடிக்கும்போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் நாம் அதற்குரிய விலை கொடுத்தாக வேண்டும். ஆனாலும் சமந்தா அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த சண்டைக் காட்சிகளில் நடித்தார். அவரது சிரமங்களை நான் நேரிலேயே பார்த்தவன் என்கிற வகையில் எனக்கு உண்மையில் பிரமிப்பு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.