வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு…

சென்னை: வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது.

கொரோனா  தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக வணிக நிறுவனங்கள் இரவு நேரங்களில் திறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பின்னர் தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், வணிக நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன. இந்த நிலையில், இனி வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம் என தமிழகஅரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில் 3 ஆண்டுகளுக்கு கடைகள் 24 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைந்து உள்ளதால், மேலும் 3 ஆண்டுகளுக்கு இதை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 5 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் கடைகள் ஒவ்வொரு பணியாளருக்கும், சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும்.

ஊழியர்கள் குறித்த தகவல்கள், அனைவரின் பார்வையில் படும் இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் அல்லது வாரத்திற்கு, 48 மணி நேரத்திற்கு மேல் யாரையும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. கூடுதல் நேரம் வேலை பார்த்தால், கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.

இரவு 8:00 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது. பெண்கள் பணியாற்ற வேண்டிய இருந்தால் எழுத்துபூர்வமாக சம்மதம் பெற்ற பின், பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

பணியில் இருக்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும், போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும்.

தொழிலாளர்களுக்கு கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட, அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

பணியிடங்களில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு குழுவை கண்டிப்பாக இருக்க வேண்டும்

உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது. இந்த விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.