ஆன்லைன் லோன்: ஆசை வார்த்தை கூறி ரூ.11 கோடி மோசடி; மலேசியாவில் பதுங்கியவருக்கு வலை!

மதுரை மாவட்டம், சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(35). இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் ரோட்டில் பைபிள் புத்தக விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு எளிய முறையில் எவ்வித டாக்குமென்டுகளும் இல்லாமல் லோன் வழங்கப்படும் என இணையத்தில் தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த ‘ஸ்பீடு லோன்’ என்ற ஆப் மூலம் வங்கி, ஆதார் விவரங்களைத் தெரிவித்து 2021 நவம்பரில் 5,200 ரூபாய் கடன் பெற்றார். ஒரே வாரத்தில் 6 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தியுள்ளார். இந்நிலையில் மே 15-ம் தேதி கடன் தொகை திருப்பி செலுத்தவில்லை எனில் போட்டோவை ‘மார்பிங்’ செய்து ஆபாச படமாக மாற்றி இணையத்தில் வெளியிடுவோம் என ஸ்பீடு லோன் ஆப் தரப்பில் இருந்து மிரட்டப்பட்டுள்ளார்.

கைதானவர்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார் 8,400 ரூபாயைச் செலுத்தியுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக ஆபாசப் படத்தை வெளியிடுவதாக மிரட்டல் வந்ததால் ராஜேஷ்குமார் தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேஷ்குமார் செலுத்திய பணம் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் காய்கறி சந்தை ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருக்கும் சாகர் அங்குஸ் ஜோர்கி என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது தெரியவந்தது.

அதையடுத்து, தேனி மாவட்ட சைபர் க்ரைம் எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் தலைமையிலான் தனிப்படை புனேவில் தொழிலாளியிடம் விசாரித்தனர். அதில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றும் பிரபுல் என்பவர், சாகர் அங்குஸ் ஜோர்கியின் செல்போன் சிம் கார்டுகள், ஆதார் கார்டு விவரங்களை வாங்கி புதிய வங்கிக் கணக்கை துவக்கி பயன்படுத்தியதும், மார்ச் முதல் மே வரை ரூ.11 கோடி மோசடிப்பணம் பரிவர்த்தனையாகி இருப்பதும் தெரிந்தது.

சைபர் க்ரைம்

அதையடுத்து போலீஸார் பிரபுல்(35), அவர் நண்பர் மகரந்த்(32), மோசடிக்கு உடந்தையாக இருந்த ராஜேந்தர்(35), தியானேஷ்வர்(37) ஆகியோரைக் கைதுசெய்தனர். மேலும் அவர்கள் லோன் தருவதாகக் கூறி மோசடி செய்வதற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் மற்றும் ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

சைபர் க்ரைம்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் விசாரித்தோம். “இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள மகரந்த்தின் நண்பர் ஜேம்ஸ் என்பவர் மலேசியாவில் உள்ளார். லோன் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி பணம் பறிக்கும் திட்டத்துக்கு மூளையாக செயல்படுபவர் அவர்தான் எனத் தெரியவந்ததுள்ளது. அவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். அவரைக் கைதுசெய்தால் மட்டுமே எங்கெங்கு எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவரும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.