உள்நோக்கத்தோடு தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வந்தால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழத்தில் தி.மு.க ஆட்சி தொடங்கியதில் இருந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தி.மு.க. பல துறைகளில் ஊழல் செய்துள்ளதாக கூறி வீடியோ மூலம் ஆதாரங்களையும் வெளியிட்டு வருகிறார். அதேபோல் இவரின் குற்றச்சாட்டக்கு தி.மு.க அமைச்சர்களும பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய அண்ணாமலை ஜீ ஸ்கொயர் நிறுவன கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கோவையில் 122 ஏக்கருக்கான அனைத்து ஒப்புதல்களையும் அந்த நிறுவனம் 8 நாட்களில் பெற்றுள்ளது. என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக இன்று சென்னை எழும்பூர் சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துச்சாமி கூறுகையில்,
அண்ணாமலை இனி தகுத்த ஆதாரத்துடன் பேசினால் அது அனைவருக்கும் நல்லது. மக்களுக்கும், அரசுக்கும், துறைகளுக்கும் நல்லது. ஆதாரம் இருந்தால் துறைகள் அதை திருத்திக்கொள்ளும். யார் வேண்டுமானாலும் இதை சொல்லாம். நாங்களே எங்காவது ஒரு கூட்டத்தில் பேசினால், கடைகோடியில் உள்ளவர்கள் கூட ஏதாவது திட்டங்கள் வைத்திருந்தால் சொல்லுங்கள் பரிசீலிக்கப்படும் என்று சொல்கிறோம்.
அப்படி இருக்கும்போது அண்ணாலை சொல்வதை நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் அவர் சொல்வது சரியாகவும், உண்மையாகும், உள்நோக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவரின் ஆலோசனைகளை எடுத்துக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் தவறான நடவடிக்கை அல்லது யாரையோ டார்கெட் பண்ணும் வகையில், நடந்துகொண்டால் அவர் மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் கோவையில் 122 ஏக்கருக்கான ஒப்புதலுக்கு சிவமாணிக்கம் என்பவர் 12.12.2019-அன்று சி.எம்.டி.ஏ.வில் விண்ணப்பம் செய்திருந்ததாகவும், அவருக்கு 28.1.2021 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறிய அவர், இது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. ஆனால் இதற்கு நாங்கள் அனுமதி கொடுத்தது போல் அண்ணாமலை பேசுகிறார்.
சி.எம்.டி.ஏ.வில் அனுமதி கேட்டு ஜீ ஸ்கொயர் நேரடியாக விண்ணப்பிக்கவில்லை. சிவமாணிக்கம் பெயரில் தான் விண்ணப்பம் வந்துள்ளது. நிலம் அனுமதிக்கு பிறகு கூட ஜீ ஸ்கொயர் அதை வாங்கி இருக்கலாம். எனவே ஜீ ஸ்கொயர் நிறுவனத்துக்கு அவர் சொல்லியது போல் 8 நாளில் அனுமதி கொடுக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil