ஹோம் ஒர்க் செய்யாத 5 வயது குழந்தை – மொட்டை மாடியில் உச்சி வெயிலில் தாய் செய்த கொடூரம்

வீட்டுப்பாடம் செய்யாத 5 வயது குழந்தையை, கை – கால்களை கட்டிப்போட்டு உச்சிவெயிலில் மொட்டை மாடியில் தாயே கிடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடப்பாண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதுவும் தலைநகர் டெல்லியில் மக்கள் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு நெருப்பாக தகிக்கிறது. இந்நிலையில் இந்த கொளுத்தும் வெயிலில், 5 வயது குழந்தையை கை – கால்களை கட்டி, நண்பகல் 2 மணியளவில் மொட்டை மாடியில் கிடத்திய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழந்தை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் கதற, கதற தாயே இந்தக் கொடுமையை நிகழ்த்தியுள்ளார்.
image
இந்த சம்பவத்தை தூரத்தில் இருந்து பெண் ஒருவர் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 25 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில், குழந்தையின் கதறல் சத்தம் பார்ப்பவர்களின் மனதை பதற வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பலரும் சம்பந்தப்பட்ட தாயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி காவல்துறையினருக்கு சமூகவலைத்தளம் மூலமாக வலியுறுத்தினர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2-ம் தேதி ஹசுரி ஹாஸ் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
image
வீட்டுப்பாடம் செய்யாததால், பெற்ற தாயே குழந்தையை இவ்வாறு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள டெல்லி காவல்துறையினர், குழந்தையின் குடும்பத்தினரை கண்டறிந்துள்ளனர். துன்புறுத்தப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் தங்கியிருக்கும் விலாசம் முழுமையாக இல்லாததால், தனிக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குழந்தையை துன்புறுத்திய தாய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.