சென்னை: சூரியசக்தி மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்து, அகில இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 300 நாட்களுக்கும் மேல் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், மத்திய அரசும் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கி வருகிறது.
இதனால் பெரிய நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிலத்தில் ஒருமெகாவாட்டுக்கு மேலான திறன் உடைய சூரியசக்தி மின்நிலையத்தை அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின்வாரியத்துக்கு விற்பனை செய் கின்றன.
இந்நிலையில், மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 12 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், 7,590 மெகாவாட் உற்பத்தி செய்து கர்நாடகா 2-ம் இடத்திலும், 7,180 மெகாவாட் உற்பத்தி செய்து குஜராத் 3-வது இடத்திலும், 5,067 மெகாவாட் உற்பத்தி செய்து தமிழகம் 4-வது இடத்திலும் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.