சிறையில் சசிகலா காய்கறி சாகுபடி செய்து எவ்வளவு சம்பாதித்தார்? – ஆர்டிஐயில் கேள்வி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது காய்கறிகளை சாகுபடி செய்ததன் மூலமாக சசிகலா எவ்வளவு சம்பாதித்தார் என்ற கேள்விக்கு சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, ‘சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா சிறையில் எவ்வளவு காய்கறிகளை சாகுபடி செய்தார்?’ என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பெங்களூரு மத்திய‌ சிறையின் தகவல் தொடர்புத்துறை அதிகாரி லதா 4 ஆண்டுகள் கழித்து பதில் அளித்துள்ளார். அதில், ”சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தபோது தன்னை காய்கறிகளை சாகுபடி செய்ய அனுமதிக்குமாறு சிறைத்துறையிடம் கடிதம் அளித்தார். அதற்கு சிறையின் தலைமை கண்காணிப்பாளர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து மகளிர் சிறை வளாகத்தில் சசிகலா காய்கறி, கீரை ஆகியவற்றை பயிரிட்டார்.

தினந்தோறும் கிடைத்த காய்கறி வகைகளை சிறையின் சமையலறைக்கு சசிகலா வழங்கினார். அவர் தனிப்பட்ட முறையில் எவ்வளவு சாகுபடி செய்தார் என கணக்கிடவில்லை. சிறையின் சமையலறைக்கு காய்கறி வழங்கியதற்காக சசிகலாவுக்கு எவ்வித ஊதியமும் வழங்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.