வியட்னாமில் 12 அதிவிரைவு காவல் படகுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சி; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு

ஹாங் ஹா,

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.

இதுதவிர, உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் வேறு சில நாடுகளுக்கும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், வியட்னாம் நாட்டுக்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், அந்நாட்டின் ஹாங் ஹா நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில், இந்தியாவில் உற்பத்தியான 12 அதிவிரைவு காவல் படகுகளை வியட்னாமிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, மத்திய அரசு அனுமதியோடு, 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 12 அதிவிரைவு காவல் படகுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. இந்த திட்ட பணிகள் வெற்றிகரம் ஆக நிறைவடைந்துள்ளன என்பதனை இந்த விழா குறிக்கிறது.

நம்முடைய மேக் இன் இந்தியா-மேக் பார் தி வேர்ல்டு திட்டத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

வியட்னாம் போன்ற நம்முடைய நெருங்கிய நண்பர்கள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பின் வழியே, நம்முடைய பாதுகாப்பு தொழில்களுக்கான உருவாக்கத்தின் ஒரு பகுதியாக வருமென்றால் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம் என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.