உ.பி.யில் இஸ்லாமியர்கள் மீது வாலிபர்கள் சரமாரி தாக்குதல்; கட்டையால் மிரட்டும் வீடியோ வைரல்

கோண்டா: உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய ஃபக்கிரிகள் மீது சில இளைஞர்கள், கட்டையால் மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபிகள் நாயகம் தொடர்பாக பாஜ பெண் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அவரையும், அவரது கருத்துக்கு ஆதரவாக டெல்லி பாஜவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் பதிவிட்டார். இருவர் மீதும் பாஜ நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பாஜவினரின் மதவெறுப்பு பேச்சுக்கு சர்வதேச அளவில் இஸ்லாமியர்களிடையே கடுமையான கண்டனங்களை பெற்று வருகிறது. இந்த பரபரப்பு அடங்கிடாத நிலையில் உத்தரபிரதேசத்தில் 3 இஸ்லாமிய ஃபக்கிரிகளை வழிமறித்து ‘நீங்கள் எப்போதும் ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தாக்கப்படுவீர்கள். ஜிஹாதிகள், பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவீர்கள்’ என சில வாலிபர்கள் மிரட்டிய சம்பவம் கொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட திங்குர் கிராமத்தில் நடந்துள்ளது. மேலும் கையில் கட்டைகளை வைத்து கொண்டு, அவர்களை தீவிரவாதிகள் என அழைத்ததோடு இஸ்லாமியர்களை தோப்புக்கரணம் போட வைத்து ‘ஜெய் ராம்’ என கோஷமிட சொல்லியும் அந்த வாலிபர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், இஸ்லாமியர்களிடம் மதரீதியாக தவறாக நடந்து கொண்ட நபர்களை கைது செய்திருப்பதாக கொண்டா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.