பாகிஸ்தானில் ஹிந்து கோவில் சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்| Dinamalar

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஹிந்து கோவிலில் மர்ம நபர்கள் சிலைகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். அங்கு அவ்வபோது ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், ஹிந்து கடவுள் சிலைகள் சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில் கராச்சியில் உள்ள கோரங்கி பகுதியில் இருக்கும் ஸ்ரீமாரிமாதா கோவிலுக்குள் வந்த மர்ம நபர்கள், அங்கிருக்கும் கடவுள் சிலைகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இது அப்பகுதி ஹிந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சஞ்சீவ் கூறுகையில், ‛6 முதல் 8 நபர்கள் பைக்கில் வந்து கோவிலுக்குள் புகுந்து, சிலைகளை தாக்கினர். அவர்கள் யார், எதற்காக தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம்’ என்றார். பாகிஸ்தானில் சமீபகாலமாக ஹிந்து கோவில்கள் மீது மர்ம நபர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவது அங்குள்ள ஹிந்துக்களிடையே ஒருவித சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.