நயன் – விக்கி டும்..டும்..டும்.. தாலி எடுத்து கொடுத்த ரஜினி..!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க இனிதே நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த வந்த நிலையில், திருமண பந்தத்தில் இணைந்தனர். மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலி பகுதியில் உள்ள ‘ஷெரட்டன் கிராண்ட் எனும் கடற்கரை நட்சத்திர விடுதியில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இருவரது திருமணம் நடைபெற்றது.

15-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க இந்து முறைப்படி காலை 10.25 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் நடைபெற்றது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்சேதுபதி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, ஷாலினி அஜித் குமார், குஷ்பு ஆகியோர் வருகை புரிந்து, மணமக்களை வாழ்த்தினர்.

இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின், நட்சத்திர தம்பதிகள் மணிரத்னம்- சுஹாசினி, சரத்குமார்- ராதிகா, இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், கெளதம் வாசுதேவ் மேனன், அட்லி, சிறுத்தை சிவா, ஹரி தயாரிப்பாளர் போனி கபூர், கலா மாஸ்டர், உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண விழாவில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திரைப்பிரபலங்களுக்கு மணமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு அச்சடிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை ஸ்கேன் செய்த பின்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

அதேப்போல், நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு வந்த முக்கிய விருந்தினர்கள், குறிப்பிட்ட இடத்தில் இருந்து மணவிழா பந்தலுக்கு பேட்டரி காரில் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் , விஜய் சேதுபதி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.