வியட்நாமிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்பு படகுகள் வழங்கிய இந்தியா: ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார்

புதுடெல்லி: வியட்நாமில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்நாட்டிற்கு இந்தியா வழங்கும் கடன் உதவி திட்டத்தின் கீழ் 12 அதிவிரைவு பாதுகாப்பு படகுகளை இன்று (வியாழக்கிழமை) ஒப்படைத்தார்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வியட்நாம் நாட்டின் ஹாய் ஃபாங்கில் உள்ள ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திற்கு இன்று (ஜூன்-9) சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகளை வழங்கினார்.

இந்திய அரசு, வியட்நாம் நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவியை வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தப் படகுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. முதல் ஐந்து படகுகள் இந்தியாவின் லார்சன் & டியூப்ரோ கப்பல் கட்டும் தளத்திலும், மற்ற 7 படகுகள் ஹோங் ஹா கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையான ‘இந்தியாவில் தயாரித்தல், உலகிற்காக தயாரித்தல்’ என்பதற்கு இந்தத் திட்டம் சிறந்த உதாரணம். கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்களுக்கு இடையேயும் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியிருப்பது, இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையின் தொழில்நுட்ப வல்லமை மற்றும் உறுதிப்பாட்டிற்கு சான்றாக அமைந்துள்ளது.

எதிர்காலத்தில் இந்தியா மற்றும் வியட்நாம் இடையே ஏற்படக்கூடிய ஒத்துழைப்புடன் கூடிய ராணுவத் திட்டங்களுக்கான முன்னோடியாக இத்திட்டம் செயல்படும் என்று நான் நம்புகிறேன். மேம்பட்ட ஒத்துழைப்பின் வாயிலாக இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறை மாற்றத்தில் வியட்நாம் பங்கேற்க வேண்டும்.

‘தற்சார்பு இந்தியா’ என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்திய பாதுகாப்புத் துறை தனது திறன்களை கணிசமாக உயர்த்தியிருக்கிறது. உள்நாட்டுத் தேவைகளோடு, சர்வதேச தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு ஓர் உள்நாட்டு தொழில்துறையை அமைப்பதே இதன் நோக்கம்” என்று அமைச்சர் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.