புதுச்சேரியில் அனுமதி மறுப்பால் சென்னைக்குப் புறப்பட்ட சுற்றுலா சொகுசு கப்பல்: கேசினோ சூதாட்ட புகாரால் எதிர்ப்பு

புதுச்சேரி: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சென்னை சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல், கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு மீண்டும் புறப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை – விசாகப்பட்டினம் – புதுச்சேரி இடையே இயங்கும் தனியார் சொகுசு கப்பல் சுற்றுலாவைத் தொடங்கி வைத்திருந்தார். இந்தக் கப்பல் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கு வந்து, புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி, இறக்கவும் திட்டமிட்டிருந்தனர். புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மீண்டும் இக்கப்பல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு புதுச்சேரியின் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியான அதிமுக உட்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கப்பலில் கேசினோ சூதாட்டங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அத்துடன் இந்தக் கப்பல் புதுச்சேரி கடலில் நிற்க புதுச்சேரி அரசு அனுமதி தந்துள்ளதா? அப்படி அனுமதி தந்திருந்தால் அந்தக் கப்பல் நிற்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதுபற்றி ஆளுநர் தமிழிசையிடம் கேட்டதற்கு, “கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு ஏதும் என்னிடம் வரவில்லை. அப்படியே கப்பல் வந்தாலும் கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையை புதுச்சேரி அரசு அனுமதிக்காது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று விட்டு புதுச்சேரிக்கு இக்கப்பல் வந்தது. இன்று புதுச்சேரி கடற்கரையில் இருந்து பார்த்தபோது தனியார் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் உப்பளம் துறைமுகத்துக்கு கப்பல் வந்து பயணிகள் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதுச்சேரி கடலில் இருந்து அக்கப்பல் புறப்பட்டு சென்றது.

இதுபற்றி அரசின் உயர் மட்டத்தில் விசாரித்தபோது, “சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வந்து கடலில் நிறுத்தி விட்டு பயணிகள் உப்பளம் துறைமுகத்தின் வழியே இறங்கி செல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை. அரசின் பரிசீலனையில் இதுதொடர்பான கோப்பு உள்ளது. இதனால் பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் கடலில் நின்று விட்டு புறப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.