கேரளாவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்: தமிழக – கேரள எல்லையில் போக்குவரத்து இல்லை..தின கூலிகள் பாதிப்பு..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்கள் தொடர்பான உத்தரவை திரும்பப்பெற கோரி முழு கடையடைப்பு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு – கேரளா எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தேசிய பூங்கா, வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள பகுதிகள் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த பகுதிகளில் உள்ள கடைகள், கட்டுமானங்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 26 பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், 23 பகுதிகளுக்கு விலக்கு அளிக்க கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் அதிகம் வசிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடைகள், கட்டுமானங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சினர் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து பல கடைகள் அங்கு அடைக்கப்பட்டிருக்கின்றன. மாநில எல்லை பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இல்லாததால் கம்பம், குமுளி, போடிமெட்டு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தின கூலிகள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.