புரோ லீக் ஆக்கி போட்டி: பெல்ஜியம் அணியை நாளை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் ஆக்கி அணி

பிரஸ்சல்ஸ்,

சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு சார்பில் 2022ம் ஆண்டுக்கான மகளிர் ஆக்கி புரோ லீக் போட்டிகள் பெல்ஜியம் நாட்டில் நடந்து வருகின்றன. இதில், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூன் 11, 12 ஆகிய தேதிகளில்) நடைபெற உள்ள ஆக்கி போட்டி ஒன்றில் இந்திய மகளிர் ஆக்கி அணியானது, பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.

இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் இந்திய மகளிர் ஆக்கி அணி 22 புள்ளிகளை பெற்று 3வது இடத்தில் உள்ளது. அர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்துக்கு அடுத்த இடத்தில் பட்டியலில் உள்ளது.

பெல்ஜியம் அணி 8 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்திய அணியை வழி நடத்தி செல்லும் கேப்டன் சவிதா போட்டிக்கு செல்வதற்கு முன் கூறும்போது, இதற்கு முன் நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய இரு போட்டிகளில் செய்த தவறுகளை திருத்தி கொண்டுள்ளோம்.

அடுத்து வரும் போட்டிகளில் அதே தவறுகள் வராமல் பார்த்து கொள்வோம். பெல்ஜியம் அணிக்கு எதிராக நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். வெளிநாட்டு மண்ணில் எப்படி வெற்றி பெறுவது என தெரிந்த எண்ணற்ற வீராங்கனைகளை நம்முடைய அணியில் நாம் வைத்திருக்கிறோம்.

சமீப மாதங்களில், தொடர்ச்சியாக நாங்கள் சிறப்புடன் விளையாடி இருக்கிறோம். இந்தியாவை தவிர்த்து அந்நிய மண்ணில் பெரிய போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை எங்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.