கண்ட நாள் முதல்: 13ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 13ம் தேதி முதல் கண்ட நாள் முதல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும். தர்ஷனா, நவின், அருண், ரஷ்மிதா ரோஜா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இத்தொடர் நந்தினி ( தர்ஷனா) வாழ்வில் குறுக்கிடும் குமரனின் (நவீன்) வாழ்க்கையை பற்றி விவரிக்கிறது. விதியின் திருப்பத்தால், ஒருவருக்கு ஒருவர் மனக்கசப்புகள் இருந்தாலும் குமரன் நந்தினியை திருமணம் செய்து கொள்கிறான். இந்தநிலையில் குமரனுக்கும் நந்தினிக்கும் இடையே காதல் மலர்கிறதா அல்லது அவர்கள் ஒருவரையொருவர் இகழ்வது தொடர்கிறதா என்பது ஒரு புறம்.

இன்னொரு புறம் குமரனின் தங்கை அர்ச்சனா (ரஷ்மிதா) தன் சகோதரன் திருமணம் செய்த குடும்பத்திலேயே தானும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். ஆனால் சில சூழ்நிலைகள் காரணமாக பணக்கார தொழில் அதிபரின் மகன் நகுலனை (அருண்) திருமணம் செய்து கொள்கிறாள். இந்த சிக்கல்கள் எப்படி தீர்க்கப்படுகிறது என்பதுதான் கதை.

இது குறித்து நடிகர் நவின் கூறியிருப்பதாவது: இதயத்தை திருடாதே சீரியலைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக கலர்ஸ் தமிழ் உடன் இணைவது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இந்த சீரியலை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் தனித்துவமான கதைக்களமும், கதாபாத்திரமும்தான். முதன்முறையாக நான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன், குமரன் என்ற கதாபாத்திரமாக மாற கடுமையாக உழைக்க வேண்டியது இருந்தது. நாங்கள் அனவரும் கடும் முயற்சி செய்து சிறப்பாக நடித்திருக்கிறோம். என்கிறார் நவீன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.