நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு – ராகுலிடம் அமலாக்கப்பிரிவினர் 2-வது நாளாக 10 மணிநேரம் விசாரணை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் 10 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள “யங் இந்தியா” நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது.

இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

அதன் அடிப்படையில் ராகுல் காந்தி நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேற்றும் விசாரணைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் 2-ம் நாளாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 11.30 மணி அளவில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார்.

அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்விகள் கேட்டனர். பிற்பகல் 3.45 மணியளவில் அவர் உணவு இடைவேளைக்காக வெளியே வந்தார். மதிய உணவு முடித்த பின்னர் மாலை 4.40 மணிக்கு மீண்டும் அதிகாரிகள் முன்னிலையில் அவர் ஆஜரானார். தொடர்ந்து நடந்த இந்த விசாரணை இரவு வரை சுமார் 10 மணிநேரம் நீடித்தது. இன்றும் அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.