ராகுலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நேரத்தில் கைதான தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து: சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனம்

புதுடெல்லி: அமலாக்கத்துறை முன் ராகுல்காந்தி ஆஜரான சமயத்தில், கைதான தொண்டர்களுக்கு ஓட்டல் உணவு வரவழைத்து தடபுடல் விருந்து அளித்த நிர்வாகியை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பணமோசடி விவகாரம்  தொடர்பாக நேற்று இரண்டாவது நாளாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன்  ஆஜரானார். முன்னதாக, காங்கிரஸ் தலைமையகத்தில் குவிந்த கட்சித்  தொண்டர்களுக்கும், போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதனால், காங்கிரஸ்  மூத்த தலைவர்கள், 7 எம்பிக்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோர் ஆங்காங்கே உள்ள  மண்படங்களில் தடுத்து வைக்கப்பட்டனர். மூத்த தலைவர்களான ஹரிஷ் ராவத்,  ரன்தீப் சிங் சுர்ஜேவாலா போன்றோர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக  செல்ல முயன்றபோது, அவர்கள் காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே தடுத்து  வைக்கப்பட்டனர். ெபாதுவாக இதுபோன்ற போராட்டங்களில் போலீசாரால் அழைத்து செல்லப்படும் நபர்களுக்கு, போலீசார் சார்பில் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். ஆனால், போலீசார் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. அதனால், டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரியின் ஏற்பாட்டில், பிரபலமான உணவகத்தில் இருந்து தொண்டர்கள் தங்கவைக்கப்பட்ட இடத்திற்கு உணவு கொண்டு வரப்பட்டது. அனைவருக்கும் தட்டில் வைத்து உணவு கொடுத்தனர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘டெல்லி காங்கிரஸ் சகோதரர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறேன்’ என்று பதிவிட்டிருந்தார். காங்கிரஸ் தலைவரின் இந்த டுவிட்டுக்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். டுவிட்டர் பயனர் சுஷாந்த் சேகல் என்பவர், ‘விருந்து நடக்கிறது, போராட்டம் அல்ல’ என்று கூறியுள்ளார். மற்றொரு டுவிட்டர் பயனர், ‘இதுபோன்ற வீடியோ பதிவை வெளியிட வேண்டியது அவசியமா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.