சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது நற்பணி இயக்கத்தினர் கடந்த 40 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி, எண்ணற்ற உயிர்களைக் காத்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்ததானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினரை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைத்து, மாநிலம் முழுவதும் ரத்தம் தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ‘கமல் குருதிக்கொடை குழு’ உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரத்ததானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். 9150208889 என்ற பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுபவருக்குத் துரிதமாக உதவ முடியும்.
ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களும், இந்த எண்ணை அழைத்து, தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம். குருதிக்கொடையாளர்களை ஒருங்கிணைத்து, குழுவைத் தொடங்கி, ரத்ததானம் செய்வது பாராட்டுக்குரிய முன்னோடி முயற்சி. இதை முன்னெடுத்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளைப் பாராட்டுகிறேன்.