வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு.! அக்னிபாத் திட்டத்தின் கீழ் விரைவில் ஆள் சேர்ப்பு நடைபெறும்; ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விரைவில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் சமூக வலைதளமான டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது: அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்கள் சேர்ப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இளைஞர்கள் அனைவரும் தேவையான முன்தயாரிப்பில் ஈடுபட வேண்டும். இதுவொரு பொன்னான வாய்ப்பு ஆகும். அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களாக சேருவதற்கு வயது வரம்பு 21-இல் இருந்து 23-ஆக உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா காரணமாக வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்தது. இத்திட்டத்தின் கீழ் முதல்முறையாக சேரும் வீரர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு வயது வரம்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது தெரியவந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.