அக்னிபத் திட்டம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தில் 4 ஆண்டு கால பயிற்சிக்குப் பிறகு, 25 சதவீத பேர் மட்டுமே நிரந்தரப் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வது என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என டெல்லி வழக்கறிஞர் ஒருவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருவதால் பல்வேறு சலுகைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அதேபோல், துணை ராணுவம் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் வயது வரம்பிலும் 3 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.