அவன் முன்னாடி போயிராதீங்க சார்.. உங்களையும் ரீல்ஸ் எடுத்துருவான்..! எமனேஸ்வரம் போலீஸை மாட்டி விட்ட தம்பி.!

ராமநாத புரம் மாவட்டம் எமனேஸ்வரம் காவல் நிலையத்துக்குள் வைத்து ரீல்ஸ் செய்து பணியில் இருந்த போலீசாரை வம்பில் மாட்டிவிட்ட தம்பி ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

காவல் நிலையத்துக்குள் நின்று வளராத மீசையை கெத்தா முறுக்கி விடுகிறாரே இந்த தம்பியால் தான் எமனேசுவரம் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது நண்பர்களுடன், கடந்த 13 ந்தேதி வைகை ஆற்று சர்வீஸ் சாலையில் அதிக சிசி கொண்ட இருசக்கர வாகனத்தில் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளார்.

இதனைப் பார்த்த எமனேஸ்வரம் காவல்துறையினர் அந்த பள்ளி மாணவரை பிடித்து வந்து காவல்நிலையத்தில் சில மணி நேரம் காத்திருக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர் . இந்த இடைவேளையில் காவல் நிலையத்துக்குள் இருந்த கைதி அறையின் முன்பு நின்று அந்த மாணவர் வளராத தனது மீசையை முறுக்கி ரீல்ஸ் செய்துள்ளார்.

காவல் நிலையத்திற்குள் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ குறித்து தகவல் அறிந்ததும் காவல் உயர் அதிகாரிகள் காவல் நிலையத்துக்குள் அந்த மாணவர் ரீல்ஸ் செய்த போது பணியில் இருந்த காவலர்கள் யார் ? என்று விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வம்பில் மாட்டிய எமனேஸ்வரம் காவல்துறையினர் , தங்களை ரீல்ஸ் எடுத்து வம்பில் சிக்க வைத்த சில்வண்டு சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் விளையாட்டுக்கு செய்கிற சேட்டை வேலைக்கே வேட்டு வைக்கும் என்பதை உணர்ந்தாவது சுயக்கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.