தீவிரவாதிகள் வெறிச்செயல் ஜம்முவில் எஸ்ஐ சுட்டுக் கொலை: வயலில் கிடந்த சடலம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா பகுதியை சேர்ந்தவர் பரூக் அகமத் மிர். இவர் உதவிய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை தனக்கு சொந்தமான வயலில் அவர் வேலை செய்வதற்காக அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். நள்ளிரவில் திடீரென அங்கு ஊடுருவிய தீவிரவாதிகள், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை வயலில் பரூக் அகமத் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உதவி ஆய்வாளரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக போலீசார், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை பாதுகாப்பு படைகள் தொடர்ந்து வேட்டையாடி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.