பள்ளி பாடத்திட்டத்தில் யோகா: மத்திய கல்வி அமைச்சர் பரிந்துரை!

பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவின்படி, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக 2015ஆம் ஆண்டில் ஐ.நா. சபை அறிவித்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில், மத்திய அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிப் பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்க மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பரிந்துரைத்துள்ளார். தேசிய யோகா ஒலிம்பியாட்- 2022 மற்றும் வினாடி வினா போட்டியை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்-ஐ நடத்துகின்றன. இந்த ஆண்டு 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 600 மாணவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கொரோனா தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இன்னல்களைப் போக்கவும், நெகிழ்தன்மையைக் கட்டமைக்கவும், மனித இனத்திற்கு யோகா பேருதவியாக இருந்ததாகக் குறிப்பிட்டார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தேசிய கல்வி கொள்கை 2020 சிறப்பு கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நமது பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்குமாறு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு பரிந்துரைத்தார். தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி முதல் 12ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்‌. பள்ளி, வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.