அக்னிபத் திட்டம்: டெல்லியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

இந்திய முப்படைகளில் நான்கு ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் முற்றி பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை கற்களால் தாக்கியும், தீக்கிரையாக்கியும் வருகின்றனர்.

போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போராட்டம் பரவுவதை தடுக்கும் வகையில் சில மாநிலங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில்
காங்கிரஸ்
சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.

முன்னதாக, “இளைஞர்கள் குரலை புறக்கணித்து புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பது அதிருப்தி அளிக்கிறது. அக்னிபத் திட்டம் இலக்குகள் அற்றது. இந்த திட்டம் குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இளைஞர்களின் நலனை காக்க காங்கிரஸ் உறுதியுடன் துணைநிற்கும். உண்மையான தேசபக்தர்களாக நாம், வன்முறை இன்றி அறவழியில் நமது எதிர்ப்பை காட்டுவோம்.” என்று மருத்துவமனையில் இருந்தபடியே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதேபோல், பாகிஸ்தான், சீனா என இரண்டு முனைகளிலிருந்து அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்ளும் போது, அக்னிபத் திட்டம் நமது ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும். நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பாஜக அரசு நிறுத்த வேண்டும்.” என ராகுல் காந்தியும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.