2வது நாளாக முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் ஆலோசனை| Dinamalar

புதுடில்லி: அக்னிபத் திட்டம் தொடர்பாக முப்படை தளபதிகளுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார்.

நம் ராணுவத்தில் ‘அக்னி வீரர்’கள் என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது. ‘அக்னிபத்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.நான்கு ஆண்டுகளுக்குப் பின், இவர்களில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர். இந்த திட்டத்துக்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீஹார் மற்றும் உ.பி., மாநிலங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனால் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு பின்னும் பல்வேறு துறைகளில் வேலை வழங்குவது பற்றி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன. துணை ராணுவம் மற்றும் அசாம துப்பாக்கிப்படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில், அக்னிபத் திட்டம் பற்றி முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பதில், துணை ராணுவ தளபதி ராஜு பங்கேற்றார். இரண்டாவது நாளாக இன்றும் ராஜ்நாத் முப்படை தளபதிகளுடன் ஆலோசித்தார். அதில், அக்னிபத் திட்டங்களை அமல்படுத்துவது மற்றும் போராட்டக்காரர்களை அமைதிப்படுத்துவது, சவால்கள் ஏற்பட்டால் அதை சந்திப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.