பட்டப்பகலில் விபத்து.. லாரி மீது மோதிய சின்னயானை.. வாகனத்தில் வந்த மூவர் பலியான சோகம்!

தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்து டாடா ஏஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டத்தை அடுத்த வாஞ்சூர் பகுதியை சேர்ந்த தீனா, நாகராஜ், மதன் குமார் உள்ளிட்ட 7 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவிற்கு சென்றுவிட்டு மாடுகளோடு டாடா ஏஸ் வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
image
அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் சென்று மோதியதில் டாடா ஏஸ் வாகனத்தில் வந்த தீனா, நாகராஜ், மதன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும் படுகாயமடைந்த நால்வரும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாற்றம்பள்ளி காவல்துறையினர் 3 பேரின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக நிகழ்ந்த விபத்தா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தால் நாட்றம்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவியது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.