5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுதலை..!

கராச்சி,

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி, கடந்த 5 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்களை நன்னடத்தை அடிப்படையில் பாகிஸ்தான் விடுவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடல்சார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். கராச்சியின் லாந்தி பகுதியில் உள்ள மாலிர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு வாகா எல்லைக்கு செல்வதற்காக லாகூர் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் முகமது இர்ஷாத் கூறும்போது, மத்திய அரசின் உத்தரவின் பேரில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் சிறையில் இருந்தார்கள். இன்று, அவர்கள் எதி அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டனர். எதி அறக்கட்டளை அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் லாகூர் அழைத்துச் செல்லும் என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.