7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் கைது: ஜார்கண்ட் போலீஸ் நடவடிக்கை

சாய்பாசா: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் தனியார் பள்ளியின் முதல்வரை ஜார்கண்ட் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசா பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியின் விடுதியில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியின் முதல்வர் விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு அவ்வப்போது பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக சாய்பாசா போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பள்ளியின் முதல்வரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘விடுதியில் தங்கியிருந்த ஏழு மாணவிகளை பள்ளியின் முதல்வர் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவரும் பள்ளி விடுதியில் தங்கியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளார்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.