வெளிநாட்டு பெண்ணை காதலித்து மணந்த கேரள இளைஞர் – 10 நாட்களுக்குள் நடந்த சோகம்

ஓமலூர் அருகே பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹாரிஸ். இவர் மருத்துவத்துறையில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. இவர் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா பகுதியை சேர்ந்த ரைசல் என்ற பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு ரைசல் வந்துள்ளார். தொடர்ந்து அந்த பெண், அவரது காதலர் ஹாரிஷை சந்தித்து பேசியுள்ளார்.
image
பின்னர் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து 10 நாட்களாக பெங்களூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து ரைசல் காதல் கணவரின் சொந்த ஊருக்கு செல்ல ஆசைப்பட்டுள்ளார். பின்னர் இருவரும் இன்று காலையில் எர்ணாகுளம் செல்வதற்காக பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளனர். அப்போது ஓமலூர் அருகேயுள்ள காருவள்ளி ரயில் நிலையத்தை கடந்தவுடன் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரைசல், ரயில் படிக்கட்டில் நின்றுகொண்டு வந்தபோது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், ரயில் நிற்காததை தொடர்ந்து, ரைசலின் கணவர் ஹாரிஸ், அடுத்து வந்த ஓமலூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து இறங்கி மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, ஹாரிஸின் மனைவி ரைசல் சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் ரயிலில் இருந்து விழுந்து இறந்ததால், இதுகுறித்து தருமபுரி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
image
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ரைசலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரைசலின் அவரது காதல் கணவர் ஹாரிஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் இருந்து விழுந்து இறந்த பெண் வெளி நாட்டை சேர்ந்தவர் என்பதால், காதலித்து திருமணம் செய்து கொண்டு கணவர் வீட்டுக்கு சென்றபோது அவரே தவறி விழுந்தாரா அல்லது தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது உட்பட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வெளி நாட்டை சேர்ந்த ஒரு பெண் ரயிலில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.