"போலி தேச பக்தர்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்" – பிரியங்கா காந்தி பேச்சு

“அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களையும், போலி தேசியவாதிகளையும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் அமைதி போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இந்நிகழ்வில் பிரியங்கா காந்தி பேசியதாவது:
image
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டம் நாட்டின் இளைஞர்களையும், நமது ராணுவத்தையும் ஒட்டுமொத்தமாக அழித்துவிடும். இதுவரை தேச பக்தர்களாகவும், தேசியவாதிகளாகவும் வேடம் போட்டு வந்தவர்களின் முகமூடி இன்று கிழிந்துவிட்டது. போலி தேச பக்தர்களையும், தேசியவாதிகளையும் இனியாவது இளைஞர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
உங்களை (இளைஞர்கள்) விட சிறந்த தேச பக்தர்கள் யாரும் கிடையாது. இந்தப் போராட்டத்தில் உங்களுடன் காங்கிரஸும், இந்த நாடும் உறுதுணையாக இருக்கிறது. எனவே நீங்கள் தொடர்ந்து அமைதி வழியில் தொடர்ந்து போராட்டம் நடத்துங்கள். நாட்டையே சீரழிக்கும் இந்த அரசாங்கத்தை தூக்கி எறிவதே உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். உண்மையான தேச பக்தியை காட்டுகிற, நாட்டின் இளைஞர்களை முன்னேற்றும் அரசாங்கத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.