“நூபுர் ஷர்மா கருத்து சரியா என நண்பர் அப்பாஸிடம் பிரதமர் மோடி கேட்க வேண்டும்” – ஒவைசி

ஹைதராபாத்: முகம்மது நபிகள் குறித்து நுபுர் சர்மா சொன்ன கருத்து சரியா என பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர் அப்பாஸிடம் கேட்க வேண்டும் என்று அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகம்மது நபிகள் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சை அளிக்கும் வகையிலான கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது கருத்தை தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடு என இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதோடு இந்தியாவின் சில வட மாநிலங்களில் வன்முறை வெடித்திருந்தது. அது தொடர்பாக கைது நடவடிக்கையையும் மேற்கொண்டனர் காவல்துறையினர்.

இந்நிலையில், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைசி, “சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தனது நண்பரை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார். உங்களுக்கு இப்படி ஒரு நண்பர் இருந்ததை இதுநாள் வரையில் நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதனால் நாங்கள் பிரதமரிடம் ஒன்றே ஒன்றை கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் உங்கள் நண்பருக்கு போன் செய்து எங்களது பேச்சுகளை கேட்க சொல்லுங்கள். நாங்கள் சொல்வது பொய்யா என்பதை அவரிடமே கேளுங்கள். அப்படியே அவரிடம் நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா சொன்ன கருத்து சரியா என கேளுங்கள்” என்று கூறியுள்ளார்.

அண்மையில் தனது தாயாரின் நூறாவது பிறந்த நாள் குறித்த பதிவில் தனது பால்ய கால நண்பர் அப்பாஸ் குறித்து தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. அப்பாஸின் தந்தையும், பிரதமர் மோடியின் தந்தையும் நண்பர்கள் என்றும். அப்பாஸின் தந்தை மறைவுக்கு பிறகு அவர் வாட்நகரில் உள்ள தங்கள் இல்லத்தில் வளர்ந்தார் என்றும். ஈகை திருநாளன்று அப்பாஸ் விரும்பும் உணவை தனது தாயார் தயாரித்து அவருக்கு கொடுப்பார் எனவும் பிரதமர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.