பலாபழம் சாப்பிட்டுவிட்டு கூல் ட்ரிங்ஸ் குடித்த சிறுவன் உயிரிழப்பு.. மேலும், 2 பேருக்கு தீவிர சிகிச்சை.!

கடலுார் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே கஸ்பா ஆலம்பாடி பகுதியில் வேல்முருகன் – பரணி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மூத்த மகளான 8 வயதான இனியா, 6 வயது மகன் பரணிதரன் ஆகியோர் அருகில் உள்ள பள்ளியில் படித்துவந்துள்ளனர்.

இந்த நிலையில், தாய் பரணி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகிய மூவரும், நேற்று முன்தினம் மாலை வீட்டில் உணவுடன், பலா சுளை சாப்பிட்டுள்ளனர். அதன்பிறகு கூல் ட்ரிங்ஸ் குடித்துள்ளனர். ஆனால், அதன்பிறகு சற்று நேரத்தில் மூவரும் வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரணிதரன் நேற்று அதிகாலை இறந்தார். தாய் பரணி, மகள் இனியா சிகிச்சை பெறுகின்றனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பலா சுளை தான் உயிரிழப்புக்கு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்துகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.