திருவனந்தபுரம் அருகே 2 வாலிபர்கள் பலி உயிரை பறித்த பைக் ரேஸ்: நேருக்கு நேர் மோதி விபத்து

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி வாலிபர்கள் பைக் ரேஸ் நடத்துவது வழக்கம். அதன்படி வழக்கமான போக்குவரத்து சமயத்திலேயே, வாகனங்களில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸ் நடத்திவந்தனர். பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல சாலையில் பைக் ரேஸ் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 25க்கும் மேற்பட்ட வாலிபர்கள் சாலையில் சீறிப்பாயும் வேகத்துடன் சென்றனர். இதில் விழிஞ்ஞம் சொவ்வரா பகுதியைச் சேர்ந்த சரத் (20), வட்டியூர்க்காவு பகுதியைச் சேர்ந்த முஹம்மது பிரோஸ் (22) ஆகிய 2 பேரும் எதிர் எதிர் திசையில் இருந்து வேகமாக வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து நடந்தவுடன் பைக் ரேசில் கலந்து கொண்ட மற்ற வாலிபர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சிக்காமல் நிமிட நேரத்தில் அங்கிருந்து மாயமானார்கள். இந்த தகவல் அறிந்ததும் விழிஞ்ஞம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்களின் உடல்களை மீட்டனர்.பின்னர் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் சரத் பிளஸ் டூ முடித்துவிட்டு ஒரு ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்தார். முகமது பிரோஸ் கல்லூரிப் படிப்பை முடித்து உள்ளார். 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.