தனி நபராக 1001 வகை யோகாசனங்கள் மூலம் உலக சாதனை புரிந்த உடுமலை யோகா ஆசிரியர்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை முக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வி.குணசேகரன் (48). யோகா ஆசிரியர். இவரது மனைவிசத்தியபாமா, மகள் அக்னி மரகதவர்ஷினி.

குணசேகரன் யோகாசனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1001 வகையான ஆசனங்களை பானை, நாற்காலி, ஏணி, மேஜை உள்ளிட்ட பல வகையான பொருள்களை பயன்படுத்தி செய்து, உலக சாதனை செய்துள்ளார்.

‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் குள்ளமானவராக நடித்ததுபோல, குணசேகரனும் 2018-ல் கால்களை கட்டிக்கொண்டு 40 நிமிடங்களில் 3,320 காலடி நடைபயிற்சி செய்தது உலக சாதனையாக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: 2001-ம் ஆண்டு முதல் யோகா கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறேன். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 2012-ல் 43 மணி நேரம் தொடர்ந்து யோகாசனம் செய்ததுஎலைட், இந்தியா, ஆசியன் புக் ஆப்ரெக்கார்டு உள்ளிட்ட நிறுவனங்களால் உலக சாதனையாக அங்கீகாரமானது.

18.1.2015-ல் நான் 10 நிமிடம் 38 விநாடிகள் 1008 சூரிய நமஸ்கார நிலைகள் (84 முறை) செய்தது தனிநபர் சாதனையாகவும், அதே நாளில் 30 கி.மீ., வேகத்தில் ஓடும் காரின் மீது அமர்ந்தபடி 291 ஆசனங்கள், ஒரு மணி நேரத்தில் செய்ததும் உலக சாதனையானது.

21.6.2015-ல் 100 பேர் ஒரு மணிநேரத்தில் 133 முறை சூரிய நமஸ்காரம் செய்தது, 24.7.2016 -ல் ஒரு மணி நேரத்தில் 762 பேர் 154 ஆசனங்கள் செய்தது, 9.9.2016-ல் 152 பேர் 417 யோகாசனங்களை 3 மணி நேரத்தில் செய்ததும் உலக சாதனையானது.

24.1.2016-ல் ஈரோட்டில் எனது மாணவி யாழினி(15), 6 மணி நேரத்தில், 1,179 ஆசனங்கள் செய்தது, 5.8.2016-ல் கோவை மாணவர் லோகணேஷ்(15) அதிகமான பொருள்களின் மீது அமர்ந்து 5 மணி நேரத்தில் 597 யோகாசனம் செய்தது, 3.8.2016-ல் 277 பேர் சேர்ந்து 2 மணி நேரத்தில் 145 ஆசனங்கள், 27.6.2017-ல் 5 மணி நேரத்தில் 772 ஆசனங்கள், 23.11.2018-ல் நான் தனி நபராக 40 நிமிடத்தில் 3,320 நடைகள் முழங்காலில் நடைப்பயிற்சி செய்தது, 29.10.2018-ல் 4 மணி நேரத்தில் 1,000 யோகாசனங்கள், அதில் புதிதாக 500 யோகாசனங்கள் செய்தது, தொடர்ந்து 10 நாட்களில் 1001 வகையான யோகாசனங்கள் பல வகையான பொருள்கள் மீது அமர்ந்து செய்தது உலக சாதனை நிகழ்வாக பதிவானது.

மக்கள் ஒவ்வொருவரும் தினமும் 10 நிமிடம் யோகா செய்தால் ஆரோக்கியமாக வாழலாம். மாணவர்கள் இன்றைய சூழலில் மன இறுக்கத்துக்கு ஆளாகின்றனர். தினமும் யோகா செய்தால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசு யோகா பாடத்தை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.