மம்தாவின் முயற்சி வெற்றி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டி

கொல்கத்தா: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், போட்டியிட மறுத்துவிட்ட நிலையில், மம்தா கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்தியஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் தற்போதைய  குடியரசு தலைவரின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து,  புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதியை கடந்த வாரம் அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில்,குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த முடிவுடன் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஆளும் பாஜக திட்டமிட்டு வருகிறது. அதுபோல எதிர்க்கட்சி சார்பிலும் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. முதலில் சரத்பவார் பெயர் அடிப்பட்டது. பின்னர் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும்  காந்தியின் பேரன் பெயர் அடிபட்டது. ஆனால், அவர்கள் போட்டியிட மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், முன்னாள் பாஜக அமைச்சரும், தற்போது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருப்பவருமான யஷ்வந்த் சின்ஹா போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாத சூழலில்,  மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்த நடவடிக்கையில் பலனாக, யஷ்வந்த் சின்கா குடியரசு தலைவராக அறிவிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையொட்டி, யஷ்வந்த் சின்கா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், அவர்தான் குடியரசு தலைவர் வேட்பாள ராக எதிர்க்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மம்தாவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக டிவிட் பதிவிட்டுள்ள சின்ஹா, மம்தாஜி எனக்கு வழங்கிய மரியாதை மற்றும் கௌரவத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக நான் கட்சியிலிருந்து விலகி அதிக எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முதலில் மத்திய நிதி அமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் 2021 இல் திரிணாமுல் காங்கிரஸில் சேருவதற்கு முன்பு 2018 இல் பாஜகவிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.